Jan 13, 2010

ஆணின் பெண் - பாகம் 3


தாயுரிமை தூக்கி எரியப்பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி ஆகும். ஆண் வீட்டிலும் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டாள். அடிமைபடுத்தப்பட்டாள்; ஆணின் உடலின்ப வேட்கைக்குக் கருவியானாள், கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற பொருளாகி விட்டாள் என்கிறார் மார்கன்.

மார்க்ஸ் அவர்கள் இதற்கு கூடுதலாக பின் வருமாறு தெரிவிக்கிறார்: "நவீன காலக் குடும்பம், அடிமை முறையை மட்டுமின்றி பண்ணையடிமை முறையையும் கரு அளவில் கொண்டிருக்கிறது ....இப்படிப்பட்ட குடும்ப வடிவம் இணை மணம் ஒருதார மணத்துக்கு மாறியதைக் காட்டுகிறது. மனைவியின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக, குழந்தைகளின் தகப்பனார் இவர்தான் என்பதை உறுதி செய்வதற்காக ஆணின் முழுமையான அதிகாரத்தின் கீழ் பெண் வைக்கப்படுகிறாள்" என்கிறார். (இது கட்டாய விவசாய வேலை தொடர்புடையது)

இவ்வாறாக அரசியல், சுயநலம், அதிகாரம் ஆகிய பல காரணங்களால் பெண் ஆணுக்கு கீழ் என்ற அடக்குமுறை எண்ணத்தை பின் வந்த சந்ததியினருக்கு வழிமொழிந்திருக்கிறது வரலாறு. இதை இரு இனங்களும் அறியாமலே கற்ற ஒன்றாகிவிடுகிறது...

இதன் தொடர்ச்சியாக பெண் வெறும் காதல் துணையாகவும், காமத்துனையாகவும் திரைப்படங்கள் தன் பங்குக்கு சித்தரிக்கிறது. பெண் அழகு தேவதையாகவும், பார்த்த மாத்திரத்தில் விழும் ஆண் அவளை துரத்தி துரத்தி பித்து பிடித்த பாடல்களை பாடி அவன் வலைக்குள் விழ வைத்துவிடுகிறான். அத்துடன் திரைப்படம் முடிகிறது. காதல் சேர்கிறதா இல்லையா என்பதையே மையமாக வைத்தெடுக்கப்படும் திரைப்படங்கள், அவர்கள் திருமணம் செய்துகொண்டபின்னர் படும் அவஸ்தைகளையும், சந்திக்கும் மண உளைச்சல்களையும், முன்பு அவள் காலில் விழுந்து கெஞ்சிய ஆண் பிறகு எப்படி அவளை அடக்கி ஆள்கிறான் என்றோ தொடர்வதில்லை (வெகு சில படங்கள் 80 - 90 களில் இருக்கலாம்)..

திரைப்பட பாடல்கள் அணைத்திலும், பெண்ணின் அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்து ஆண் கவிஞர்கள் பாடி வருகிறார்கள். பெண்ணுக்குண்டான அத்தனை உணர்ச்சிகளுக்கும் (தாய்ப்பாசம், தங்கைப்பாசம், இன்னும் பிற) அவர்களே முதலாளியாக நின்று பாடுகிறார்கள். அதையும் மீறி பெண் அத்துறையில் வந்துவிட்டால், அவள் அத்துறையை சார்ந்த ஆணின் பாலியல் தேவையை தீர்த்துப் பெற்றதாக கூறுவார்கள். உலகமெங்கிலும் ஆணுக்கு பணம், பெண்ணுக்கு உடல் இந்த தீர்மானம் தான் ஆணாதிக்கத்தின் மைய்ய நோக்கு. இதுவே பெண்களின் உறுப்புகளுக்கு எதிராக அவர்களை கட்டவிழ்த்துவிடுகிறது. விளைவு ஆண் வரலாறு, ஆண் மதம், ஆண் இலக்கியம், ஆண் அதிகாரம், ஆண் அரசியல், ஆண் சர்வாதிகாரம், ஆண் வன்முறை.

(சிறு குறிப்பு: கட்டுரைகளில் நான் குறிப்பிட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் இவர்களின் தத்துவத்தை பின்பற்றுபவர்கள் கூட ஆணாதிக்கத்திற்கு விதிவிலக்கல்ல)

No comments:

Post a Comment