Jul 28, 2010

சாத்தான்கள் அச்சுறும் புன்னகை


வானம் தொடக் கூசும்
அப் பாதை
கால்களைக் கூவி
அழைத்துக் கொண்டேயிருக்க

வழியில் வரப்போகும்
சப்தம் விரியத்தொடங்குகிறது
பின் மூளையில் இக்கணமே

அதிர்வுறுகிறதென் சலனம்

மைல்களுக்கப்பால் நெளிந்துகொண்டிருக்கும்
இருளின் வாசனை
நாசிகளை நெருங்குகையில்
அரவம் உறங்கும் குடல்களை
பிரட்டி எடுக்குமோ

சாலையில் எழுப்பிய மேடுகளாய்
இடைவெளி விட்டு
இடைவெளி விட்டு
தொண்டைக்குழி எழும்ப
வியர்வையின் நீரைத்தான்
ஊற்றுவனோ மரம் வைத்தவன்

கடவுளைத் தொட்டிரா கைகள்
எவ்வாறு பாறைகளை உணரும்

கண்களை மூடித்துயில்கையில்
மோதவே செய்கிறது அனுக்கள்

பின்
வாங்குகிறது
கரிய நிறத்திலான ஏதோ ஒரு உருண்டை

உருவத்தைக் கிழித்து
சாத்தான்கள் அச்சுறும் புன்னகையுடன்
உதைத்தெழுப்பி
விளையாடுகிறது
அக்
குழந்தை

நிச்சலனம்.

No comments:

Post a Comment