Oct 7, 2010

நெளியும் எதிர்பார்ப்புகள்



எதிர்பார்ப்புகள்
நிறமற்ற தன் கைகளால் வருடிக்கொடுக்க
நீண்ட குறிகள் பெற்றெடுக்கிறது
கட்டளை எனும் சாத்தான்களை
மஞ்சள் நிற பாம்பின் முடிச்சுகளின் கீழ்
சேமச்சக்கரம்
தாய்க்குப் பின் தாரம்

தாங்கி நிற்கும் மார்புச்சுனை நீர்
பகலில் இசைக்கிறது உலகெங்கிற்குமாய்
கண்ணுறங்கும்
தாலாட்டுப் பாடலை

அந்திச்சூரியன் மலைகளை முத்தமிட்டு
மறையும்
அவ்விருள் பொழுதில்
பெயர்க்கிறது
பெருவெள்ளமாய்
உடலெங்கும் வெண்ணிற பூரான் மயிர்களை

இடைப்பொழுதில் மனம் தேடியலைகிறது
அறைந்து மூடப்பட்ட சன்னல்களின் கீழ்
விரியும் சூர்யக்கதிர்களினூடே
ஓர்
புன்னகை
ஓர் சொல்
ஓர் பார்வை
ஓர் முத்தம்

அப்பொன்னிற புகை
தூதனுப்பியது
ஏற்ற
நேரம் கேட்டு

விட்டுச்சென்ற நிழலில்
நெளிகிறது
அதே
பூரான்கள்.

இது தவிர இன்னும் 2 கவிதைகள் இம்மாதம் உயிரெழுத்தில்....



1 comment: