Jan 9, 2011

துரோகங்களின் பட்டியல் – 4 : பாடநூல்களில் துரோகம்


         “கேடில்        விழுச்செல்வம்     கல்வி         யொருவற்கு       
           மாடல்ல     மற்றை       யவை.”

ஒருவனுக்கு துன்பம் தராத சிறந்த செல்வம் கல்விச் செல்வமே ஆகும்; ஏனையப் பொருள் செல்வங்கள் எல்லாம் சிறந்த செல்வங்கள் ஆகமாட்டா.

இக்குறளின் பொருளில் குறிப்பிடப்படும் ஒருவன் ‘தான்’ ஒருவனாகவும், தன்னால் துன்பம் பெறக்கூடாதவனாக இருக்கவேண்டிய ‘மற்றவன்’ ஒருவனாகவும் பொருள் கொள்ளுதல் அவசியமாகிறது.

கல்வி எனும் பொழுது அது பள்ளிப்படிப்பால் கிட்டுவது என்பதோடு, பல்வேறு முறைகளில் அறிவைத் தேடி பெருவதற்கான ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதாகவும் இருத்தல் வேண்டும்.  சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளை, ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சக மனிதர் மீது அக்கறை செலுத்தி மனித குலத்தை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை உருவாக்குவதற்கு ஒருவரைத் தயார் செய்யவே கல்வி என்பது அவசியமாகிறது. 

ஆனால் பள்ளிக்கூடங்களில் வரலாற்றுப் பாடங்கள் என்ற பெயரில் மத அடிப்படைவாதமும், பிரிவினைப் புத்தியும், இந்துத்துவ விசுவாசமும் தான் கற்பிக்கப்படுகிறது.  தன்னளவில் ஒருவன் தன்னை, தன் மத விசுவாசத்தை உயர்த்திக் கொண்டு சுயநலத்தை வளர்த்தெடுக்கும் இந்துத்துவ மடங்களாகத்தான் கல்விக் கூடங்கள் செயல்படுகின்றன.  அப்படி சுயநலத்தில் வளர்ந்து முதலிடம் பிடிக்கும் பிள்ளைகளை அடையாளம் காணவே மதிப்பெண் பட்டியல்கள் உதவி புரிகின்றன.  கம்யூன் என்று சொல்லக்கூடிய கூட்டுச் சமூகத்தை உருவாக்குவது கல்வியின் நோக்கம் என்றால் தனித் தனி மதிப்பெண் பட்டியல்களின் தேவை ஏற்படாது.  குடும்பம் எனும் சமூக நிறுவனத்திற்கும், மத நிறுவனத்திற்கும், அரசாங்கத்திற்கும், முதலாளிகளுக்கும் விசுவாசியாக உழைத்துக் கொட்டவே கல்விக் கூடங்கள் ஒருவரைத் தயார் செய்கிறது. 

சமூகப் போராளிகளாக, சமூக சீர்திருத்தவாதிகளாக, மாற்று சிந்தனைக் கொண்டவர்களாக, சமதர்மத்தைக் கோருவோராக, தன் பிள்ளைகளை மட்டும் பிள்ளைகளாக கருதாமல் உலகில் உள்ள ஒவ்வொருவரையும் பிள்ளைகளாக கருதுவோராக இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லோரும் கல்விக் கூடங்களுக்கப்பாற்பட்ட புத்தகங்களையும், சமூக விஞ்ஞானங்களையும் தேடிப் பயின்றவர்களாக இருபதே இதற்கு சாட்சி.

அரசாங்கம் கற்றுத் தரும் பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுகள் எழுதி அரசு எந்திரத்திற்கு எந்த சேதமும் நேராமல் இருக்க தந்திரமானத்  திட்டங்களை, சட்டத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பதற்கான வங்கி அறிவைக் (deposited intelligence) கொடுப்பதே கல்விக் கூடங்களின் லட்சியமாக இருக்கிறது. அரசு எந்திரமானது முதலாளிகளையும், இந்துத்துவ மத நிறுவனங்களையும், இந்துத்துவவாதிகளையும், ஆதிக்க வர்க்கத்தினரின் நலன்களை காப்பாற்றவும் தோன்றிய ஒன்றாகவே கருதத்தோன்றுகிறது. சிறுபான்மையினரின் நலன்கள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே சிறிய அளவில் நிறைவேற்றப்படுகிறது. அப்படி ஏதாவது இட ஒதுக்கீடு தீர்ப்பாயங்கள் தாக்கல் செய்யப்பட்டாலும் சனாதன தர்மத்தின் நம்பிக்கைவாதிகளான உயர் சாதி இந்துக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் மேற்கொள்கின்றனர். (*சிறுபான்மையினர் என்ற பிரிவுக்குள் கடவுள் மறுப்பாளர்களும், கம்யூனிஸ்டுகளும், பூர்ஷவாக்களை எதிர்ப்போரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து).  தரப் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஆதிக்க சாதி மாணவ எந்திரங்கள், சமூக நலனில் அக்கறை கொள்வதை விட அரசு விசுவாசிகளாகவே செயல்படுகின்றனர்.  இப்படிப் பட்ட அடிப்பொடிகளை உருவாக்குவதே கல்விக் கூடங்களின் தலையாய பணியாக உள்ளது. 

கல்வி குறித்தான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் உயர் சாதி இந்துக்களின் மனப்பான்மைக்கு காரணமாக ஆரியத் திரிபு செய்யப்பட்ட வரலாற்றுப் பாடப் புத்தகங்களும் ஒரு காரணம் என்று ஆ. மார்கஸ் எழுதி, கருப்புப் பிரதிகள் 2005ல் (2nd edition) வெளிவந்த “பாட நூல்களில் பாசிசம் நச்சை விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்”  எனும் நூலில் குறிப்பிடுகிறார்.  53 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் வரலாற்றுப் பாடங்களில் ஆரிய-பார்ப்பனிய-இந்துத்துவம் செய்யும் திரிபுகளையும், மற்ற மதத்தவர் மீது வளர்த்துவிடும் காழ்ப்புணர்ச்சிகள் குறித்தும், சனாதன தர்மத்தைக் கட்டிக்காக்க நினைப்பதையும் ஆதாரங்களுடன் பட்டியலிடுகிறார்.  இதற்கு (இந்து) மத்தியப் பாடநூல் நிறுவனமான NCERT எப்படி R.S.S ஆட்களைக் கொண்டு நிறப்பப் பட்டு ஆபத்தான மோசடிகள் அரங்கேற்றப்பட்டன எனும் விவரிப்புகள் பெரும் அச்சத்தை வரவழைக்கிறது.

வரலாறுப் பாடங்கள் உள்ளிட்ட சமூக விஞ்ஞானப் பாடங்கள் தேவையில்லை என்ற குரல் ஒரு பக்கம் ஒலித்துக்கொண்டு மாற்றுக் கல்வி என்ற பெயரில் ஆங்கிலேய கல்வி முறைகளை ஊக்குவித்து வரும் சூழலில், வரலாற்றுப் பாடங்களின் முக்கியத்துவம் குறித்து     
அ. மார்க்ஸ் அவர்கள் குறிப்பிடுவது “ஒரு சமூகத்தின் உணர்வுகள் என்பது ஏதோ  கடவுளால் அருளப்பட்டவையல்ல. வரலாற்று ரீதியாகக் கட்டமைக்கப்பட்டவையே”. மேலும் “வரலாற்று ரீதியாகச் சாதீயச் சுரண்டலையும், தீண்டாமைக் கொடுமையையும் அறியும் ஒரு மாணவன்தான் இன்றைய இட ஒதுக்கீட்டுக் கருத்தியலைப் புரிந்துக்கொள்ள இயலும்.  அதை அறியாத போது இட ஒதுக்கீடு என்பதை உயர்சாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே மாணவ மனம் புரிந்துக் கொள்ளும். இத்தகைய புரிதலே இந்துத்துவவாதிகளுக்குத் தேவை. எனவே தான் இந்தப் பாட நூல் தகிடுதத்தங்கள்”.

இப்படி இந்துத்துவ அரசு செய்யக் காரணம், இந்தியாவின் பன்மை அடையாளங்களைக் குலைத்து, இந்தியா ஒரு இந்து நாடு என்று முன்னிறுத்தவே என்பதைப் புரிந்துக்கொள்ளலாம். தேசியம் என்ற ஒரு கட்டமைப்பே இதற்குத்தான் பயன்படும். R.S.S. காரர்கள் தங்கள் வரலாற்றைத் தாங்களே எழுதிக் கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்த கோல்வால்கரின் (1939) கனவுப்படி எந்த மாதிரி அந்த வரலாறு அமைய வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள் என்று அ. மார்கஸ் குறிப்பிடுகிறார். (இது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்லாது காங்கிரஸ் உட்பட ஆதிக்க சாதியினரது எல்லா கட்சிகளுக்கும் பொருந்துவதாகவே உள்ளது, மேலோட்டமாகத் தீவிர பார்ப்பனிய ஆதரவு இல்லையென்றாலும் சாதிப் பிடிப்பும், சுரண்டல் போக்கும் உள்ளதை மறுக்க முடியாது)

          ”இந்தியக் கலாச்சாரத்தில் பன்மைத் தன்மைக்கு இடமில்லை’ இந்த நாடு இந்துக்களுடையது. சமணம், பவுத்தம், சீக்கியம் எல்லாம் அதற்குள் அடக்கம். ஆரியர்களே இந்நாட்டின் பூர்வக்குடிகள். வேதகால்ம் பொற்கால்ம். பவுத்த மதத்தை ஏற்றிக்கொண்ட அசோகர் போன்ற மன்னர்கள் காலத்தில்தான் இந்தியா பலவீனமடைந்தது; அந்நிநியப் படையெடுப்புக்கு ஆட்பட்டது.  இந்தியாவின் இழிவுகளுக்கெல்லாம் முஸ்லிம் மன்னர்களே காரணம். கட்டாய மதமாற்றம், இந்துக்கள் மீது தனியான வரிச்சுமை என்பதாக அவர்களின் ஆட்சிகள் அமைந்தன. சுதந்திரப் போராட்டப் பின்னடைவுகளுக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரே காரணம். சுதந்திரப் போராட்டத்தில் அவர்களோ, கம்யூனிஸ்டுக்ளோ பங்களிக்கவில்லை. நாட்டுப் பிரிவினைக்கும், மதவாதத்திற்கும் முஸ்லிம் லீகே காரணம். கம்யூனிசம் என்பது நாசிசம், பாசிசம் போன்ற ஒரு அரசியல் கொள்கை மட்டுமே. தேசியமும் சோசலிசமும் கலந்த ஒரு வடிவமே நாசிசம். சுபாஷ் சந்திர போசை ஆற்றுப்படுத்தியதே வி.டி. சாவர்க்கர்தான். சுதந்திர போராட்டத்திற்குப் பிந்தைய இந்திய உருவாக்கத்தில் ஜவஹர்லால் நேருவின் பங்கு குறிப்பிடத்தக்கதன்று”.


இது ஏதோ அ. மார்க்ஸ் அவர்களின் தனிப்பட்ட கருத்து என்று நாம் ஒதுக்கிவிடமுடியாது, வரலாற்றுப் புத்தகங்களில், R.S.S. இதழில் அதுல் ராவத் எழுதியக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள 41 கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு NCERT  ஆறாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்புப் புத்தகங்களில் மாற்றங்கள் செய்தும், சில கருத்துக்களை எந்த அறிவிப்பின்றி நீக்கவும் செய்திருக்கின்றது.  அதை பட்டியலிட்டு, அதற்கெதிரான வரலாற்று ஆதாரங்களையும் குறிப்பிட்டிருக்கிறார் அ. மார்கஸ்.

பழைய CBSE வரலாற்றுப் பாடப்புத்தகங்களை நீக்கிவிட்டு, நான்கு புதிய புத்தகங்களை 2002 இல் வெளியிட்டுள்ளது: அவை:

1)                 மக்கன்லாலும் மற்றவர்களும் எழுதிய ‘இந்தியாவும் உலகமும்’ 6 ஆம் வகுப்பு. இந்நூலில் இரண்டாம் அலகு வரலாறு பற்றியது)
2)                 மக்கன்லால் எழுதிய ‘பண்டைய இந்தியா’ 11 ஆம் வகுப்பு.
3)                 ஹரி ஓம் எழுதிய ‘இன்றைய இந்தியா’ 11 ஆம் வகுப்பு
4)                 மீனாட்சி ஜெயின் எழுதிய ‘மத்திய கால இந்தியா’ 11 ஆம் வகுப்பு.

இச்செயலுக்கு அவர்கள் சொல்லுகிற பதில்: ‘நீக்கப்பட்ட கருத்துக்கள் சில சமுதாயங்களின் உணர்வுகளைப் புன்படுத்துகின்றன’ என்பது.

 இங்கு நாம் சரியாக புரிந்துக் கொள்ளவேண்டியது சில சமுதாயம் என்பது வேத இந்துத்துவ மரபு வாரிசுகளின் சமூகம். 

பாரத நாடு என்பதற்கான பெயர் விளக்கத்திலிருந்து வேதக் காலத்தை பொற்காலம் என்பது உள்ளிட்ட பல்வேறு பாசிசக் கருத்துக்களை பாடதிட்டங்களில் ஏற்றியுள்ளனர்.  

பக். 19 வரலாறு எழுதுவதில்  இந்துத்துவத்தின் அடுத்த ‘புராஜெக்ட்’ வேதகாலத்தைப் பொற்காலமாகக் கட்டமைப்பது. இதையும் ரொம்பத் துல்லியமாக இவ்விரு பாடநூல்களும் செய்து முடிக்கின்றன.

நகர அமைப்பைக் உருவாக்கிய சமூகத்தைத் தான் “நாகரீகம்” Civilization என்று அழைக்கிறொம்.  அகழ்வாராச்சியில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தான் “சிந்து வெளி நாகரிகம்” என்றழைக்கிறோம்.  ஆனால் இவர்கள் வேதப் பண்பாட்டை வேத நாகரீகம் என்று குற்ப்பிடுவதன் மூலம், தொன்மையான பின்னணி கொண்டதாக ஆரிய பண்பாட்டை கட்டமைக்க முயல்வது இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் அறிந்துக்கொள்ளமுடிகிறது.  அதை விடக் கொடுமை ‘சிந்து வெளி அகழ்வுகளின் அடிப்படையில் இந்திய பழமை கி.மு. 5000த்தை எட்டுகிறது (ப.இ. பக்.20)   சரியான அகழ்வாராச்சிக் குறிப்பாக மார்க்ஸ் கூறுவது ”எவ்வளவு பின்னுக்குக் கொண்டு சென்றாலும் இந்தியாவின் நகர நாகரிகத்தை கி.மு. 2600க்கு முன் கொன்டு செல்ல இயலாது” என்பது தான். 

திராவிட மொழிகள் என்பதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் தவிர ’ப்ராஹீய்’ என்பது ஒன்று. பலூசிஸ்தானத்தில் வழக்கிலிருந்த மொழி. இதனடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்தை ‘ப்ரோட்டா எலோமா’ நாகரிக் கூறுகளுடையது என மெக் ஆல்பின் போன்ற வரலாற்றறிஞர்கள் வாதிட்டனர். எனவே தொல் இந்த நாகரிகம் என்பது மேற்காசிய (மெசபடோமிய) எலாமைட் நாகரிகத்துடன் தொடர்புடையது என்கிற கருத்தும் மேலெழுந்தது. 

அதாவது இன்றைய முஸ்லிம் நாடுகளின் பழைய நாகரிகங்களுடன் தொடர்புடையது என்று பொருள்.

 “பெரியார் அவர்களும், மேற்குறித்த உன்மைகளின் அடிப்படையில் ‘இஸ்லாமியர்கள் திராவிடர்களே’ என்று குறிப்பிட்டிருப்பதாக அ. மார்க்ஸ் கூறுகிறார். மேலும் ‘இஸ்லாம் என்பது திராவிடம் என்பதன் அரபுச் சொல்’ எனக் கவிதையும் பாடியிருக்கிறாராம் பெரியார்.” 

குழந்தைகள் படிக்கும் பாடப் புத்தகத்திலேயே இவ்வளவு திரிபுகளைச் செய்தவர்கள் கடவுள் எனும் கருத்தாக்கத்தை மக்கள் மனதில் திணிக்க கதையாடல்களை செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புவது  எந்த வகையில் சிறப்புடையது?  கடவுள் இருக்கிறார், அநியாயங்களைத் தட்டிக் கேட்க தசாவதாரங்கள் எடுத்து வருவார் என்றும், பாவம், நரகம் என்றும் அச்சுறுத்தல்களை வகுத்தவர்கள் மத அடிப்படைவாதிகளாக  செயல்படுவதற்கான தண்டனையாக ஏன் இட ஒதுக்கீட்டு தீர்ப்பை அந்தக் கடவுளின் தீர்ப்பாக கருத மறுக்கிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளுக்கு பார்ப்பன இந்துக் கடவுள்கள் ஒரு போதும் செவிசாய்க்க மாட்டார்கள் என்ற உன்மையை அறிந்ததனால்தான் என்று கருதலாமா?

சாதியின் பெயரால் பல கொடுமைகளை செய்தவர்களை அழிப்பதற்கான (அவர்கள் பாஷையில் சொல்லப்போனால் வதம் செய்ய) கடவுளின் அவதாரமாய் பெரியாரையும் அம்பேத்கரையும் கருத அவர்களால் ஏன் முடியவில்லை.  எளிதாக அவர்களை அசுரர் என்றும் வகைப் படுத்திவிடலாம், அவர்களது முன்னோர்களின் உத்திகளைப் பயன்படுத்தி.

அசுரர் பற்றிய குறிப்புகள் உலகாயதம் புத்தகத்திலிருந்து: 

அசிரியாவிலிருந்து குடி பெயர்ந்தவர்கள் அசுரர்கள், ஆரியர்களுக்கு முன்னரே இந்தியாவில் குடியேரியவர்கள். சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள் அசிரியர்களே. சதபத பிராமணத்தின் படி, மகதம் அல்லது தென் பீஹாரில் அசுரர்களது குடியிருப்பு இருந்ததைக் குறிப்பிடுகிறது. அசுரர் எனும் சொல் ஒரு உயர்ந்த நாகரீகத்திலிருந்து கடன் பெறப்பட்டது.

அசுர எனும் சொல் பழங்கால இந்தோ-ஈரானிய சமூகத்தின் நாகரீகப் பிரிவினரைக் குறிக்கிறது.  அசுரர் என்பது அசிரியாவிலிருந்த ஒரு துணைக்கடவுளின் பெயர். அசிரியர்களுடன் இந்தோ ஈரானியர்கள் உறவு கொண்டு எழுந்த வம்சாவழிப் பெயர்.

மூர்க்கத்தனமான காட்டுமிராண்டி மக்களான ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்தபோது பதிலுக்கு அவர்களைத் தாக்கியவர்களை அசுரர்கள் என்று அழைத்தனர். ஆரியர்கள் விரட்டியடித்து அவர்களை அழித்தனர். சோட்டாநாக்புரி பகுதியில் வசிக்கும் அசுரர்கள் ஆரியர்களை எதிர்த்த அசுரர்களின் வழித்தோன்றல்கள். தானா அல்லது மிர்சாப்பூர் மாவட்டத்தில் இப்பொழுதும் காணப்படும் நீர்நிலைகளில் அணை கட்டியவர்கள் இவ்வசுரர்களின் வழித்தோன்றல்களா என்பது வெளிப்படையானதொரு கேள்வி. இருப்பினும் இத்தகைய அனுமானங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை.

அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியவை வெவ்வேறு கலாச்சார மட்டத்திலிருந்த மக்களைக் குறிக்கும் சொற்களாகும். இவர்கள் அநாகரீகமான ஆதிவாசிகள், அரைகுறை நாகரீக இனங்கள் ஆவர். இவர்கள் ஆரிய கலாச்சாரம் பரவுவதைத் தடுத்தனர்.  புராணக் குறிப்புகளில் இவர்களைஆரம்பத்தில் மனிதர்களாக்க் குறிப்பிட்டனர். பின்னர் எதிரிகள் என்கின்றனர். பின்னர் பூதாகரமான உருவங்களோடும் பூதங்களோடும் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

பெரும்பாலான அசுரர்கள்தான் சிந்து சமவெளி நாகரீகத்தை உருவாக்கியவர்கள். (பல்வேறு சூத்திரங்கள், வேத நூல்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், அவற்றை ஆராய்ந்த மாமேதைகளான தாஸ்குப்தா, பானர்ஜி, சாஸ்திரி, பி.கே.கோஷ் இன்னும் பிற மேலைநாட்டு ஆய்வுகளைத் தொகுத்தே சட்டோபாத்தியா இம்முடிவுகளை வெளியிடுகிறார்).

அமராவதி நதிக்கரையில் ஒரு பழங்கால நகரத்தை அகழ்வாளர்கள் தோண்டி வெளிக்கொண்டு வந்துள்ளனர். ரிக்வேத ஆதாரப்படி, இதனை அசுரர்களின் நகரம் என்றும் நாம் கருதலாம். இது ஹரப்பா என்று நமக்குத் தெரியும்.

ரிக்வேதத்தில் அசுரக்னா என்ற சொல்லும், வரசிகா என்ற சொல்லும் உள்ளது. இந்திரன் வரசிகாவையும் அவன் குலத்தையும் முற்றிலுமாக அழித்தான். அசுரக்னா என்ற பாத்திரத்தில் இருந்து இதைச் செய்தான். வரசிகா என்பது ஒரு அசுரனுடையப் பெயர் (சாயனார் கூறுகிறார்). அவர்களது நகரம் ஹரியுபியாகும், அதாவது சிந்து வெளியின் ஹரப்பா...பல்வேறு நூல்களின் ஆய்விலிருந்து சிந்து வெளியின் நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் அசிரியாவிலிருந்து என்று பானர்ஜியும் சாஸ்த்ரியும் கருதினர். இக்கருத்தை சமகால அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்று சட்டோபாத்தியா குறிப்பிடுகிறார்.

(இது மட்டுமல்லாது, கொங்கனி அகராதி ஒன்று வேதம், பார்ப்பனியம் குறிப்பிடும் தேவர்கள், ரிஷிகள், அரசர்கள் ராமன், வீரன் அர்ஜுனன், அகத்திய முனிவர் உள்ளிட்டவர்களின் கதைகளை  வேறாகச் சொல்கிறது).

சுதந்திரப் போராட்டக் காலத்தில்:

சத்தியமூர்த்தி ஐய்யர், குழந்தைத் திருமண தடைச் சட்டத்துக்கு சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு தர்மத்தைப் பேணிக்காக்க தன் குழதைக்கு ருதுவாகும் முன்பே திருமணம் செய்து வைக்கப்போவதாக சூளுரைத்திருகிறார். பெரியார்: சுயமரியாதை சமதர்மம் (எஸ்.வி.ராஜதுரை வ. கீதா, விடியல் பதிப்பகம்)  எனும் நூலில், (The Child Marriage Bill II, Revolt, 1 September 1929 இல் வந்தது)  சா. குருசாமி அவர்கள் எழுதிய பதில் நமக்கு பகுத்தறிவு என்பதற்கான ஒரு உதாரனத்தைக் காட்டுகிறது.

மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து காயத்ரி மந்திரம் சொல்லுபவன், நிச்சயமாக ஆகாயத்தில் பறக்கக் கூடியவனாவான் என்றும், அவன் விரும்புகிற எந்த வடிவத்தை வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்றும் ‘மனு நூல்’ கூறுகிறது. நமது பார்ப்பன நன்பர்களில் குறிப்பாக காயத்ரி ஜெபத்தை ஆண்டுக்கணக்கில் செய்துகொண்டிருந்த சாஸ்திரிகளில் எத்தனை பேர் பறக்கும் கலையை கற்றுக்கொண்டுள்ளனர் என்பதை அறிய விரும்புகிறோம்.

பார்ப்பனியத்தைத் தொடர்ந்து விமர்சிப்பதற்கான அவசியத்தை ஏதோ மதத் தூற்றுதலாக கருதிவிட இயலாது. அவர்களே தற்போது நிலவும் இந்தியச் சமூகச் சிந்தனைகளை கட்டமைத்தவர்கள், இன்றும் ஆதிக்க நிலையில் இருப்பவர்கள் அவர்களும், அவர்களால் அரவணைத்துக் கொள்ளப்பட்டவர்களுமே, இவற்றை சரியாக புரிந்துக் கொள்ளாத பெண்களை, மக்களை மூட மத நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுப்பது சாத்தியமில்லை, அதன் வழி பெண் விடுதலையும், சமதர்ம சமுதாயமும், சுரண்டலற்ற சமுதாயமும் சாத்தியமில்லாமல் போய்விடும் என்ற நோக்கமே இவ்விமர்சசங்களுக்குக் காரணமாய் அமைகிறது.  ஒடுக்கப்பட்டவர்களில் பெண்ணும் அடக்கம், அவளும் ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கமே, அடிமைத்தனம் என்பது தொழில் அடிப்படையில் மட்டும் என்று கருதி பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மட்டும் களைவது எவ்வகையிலும் சமதர்மச் சமூகத்தை நிறுவ இயலாது. அது குறைபாடுடையச் சமூகமாகத் தான் இருகும். 

கருத்தாக்க அடிமைத்தனங்களை ஒழிக்க வேண்டிய அவசியத்தை புறக்கணிப்பதென்பது சுயமரியாதயையும், சுதந்திரத்தையும் நிராகரிப்பதற்கு சமமாகப் பெண்கள் கருதுவதன் மூலமே ஏன் பெண் விடுதலை அவசியம் என்ற கேள்வியை அவர்களிடத்தில் எழுப்ப உதவும். 

“உலகை மாற்றியமைப்பதென்பது ஒரு சில மனிதர்களின் தனி உரிமையல்ல; ஒட்டுமொத்தச் சமூக உரிமை பாவ்லோ ஃப்ரெய்ரோ, மாற்றுக் கல்வி சிந்தனையாளர்.

No comments:

Post a Comment