Dec 1, 2011

மதவாதம் முன்வைக்கும் மக்கள் நலன் என்ன - ஓர் இணைய விவாதம் - 2

Nirmala Kotravai கூடங்குளம் பிரச்சனையில் r.s.s இன் இன்றையஅறிக்கை நமக்கு எதை உணர்த்துகிறது? அதேபோல் ஏஞ்சல் டி.வியில் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாட, மற்ற நிகழ்வுகளை கொண்டாட பயனுள்ள செலவாக சேனலுக்கு 10,000 ரூபாய் கட்டி ஒரு நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்யுங்கள் என்று விளம்பரம் கண்டேன்..மதம் எதற்குப் பயன்படுகிறது? மக்களை சுரண்ட...அச்சுரண்டலுக்கான அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள, மேலும் அவ்வதிகாரத்திற்கான மக்கள் தொகை எண்ணிக்கையை இழந்துவிடாமல் இருக்க அவ்வளவுதான்...இச்சூழலில் இவ்வாதம் தொடர்வது மகிழ்ச்சி. சிறு சிறு பின்னூட்டங்களாக இட்டு தொடர்வது, ஓட்டத்தை கெடுப்பதாக நான் உணர்கிறேன். அதனால் இவ்வாதத்தின் தொடர்ச்சியை எனது வலைப்பதிவிற்கு எடுத்து செல்கிறேன். பதில்கள் சற்று நீளமாக இருப்பதால் இம்முடிவே தவிர என் வலைப்பதிவுக்கு விளம்பரம் தேடும் நோக்கம் இல்லை. அதே போல் சுஜின் அவர்களும் தனது விளக்கங்களை தன் வலைப்பூவில் பதிவு செய்யட்டும் படிக்கிறேன்..அல்லது இங்கே பதிவு செய்தாலும் உரையாடத் தயாராக இருக்கிறேன்...என் பதில்களின் சுட்டி இங்கு இணைக்கப்படும்...நன்றி.


தொடர்கிறது:


Bharat Voice Sujin 


நீங்கள் உங்கள் கொள்கைப்படி மாவோ செய்தது தவறில்லை என்பது போல கூறுகின்றீர்கள். நான் என் கொள்கையின் படி கோட்சே செய்தது தவறில்லை என்கிறேன். அதே சமயம், இது இரண்டுமே காந்தியவாதிகள் கண்ணோட்டத்தில் தவறாக தெரியும். இவை அனைத்துமே கொள்கை தான் சரி, தவறு என்கிறது. கடவுள் பற்றிய விவாதத்துக்குள் செல்ல நான் விரும்பவில்லை. நான் என்ன விளக்கம் கொடுத்தாலும், கண்ணை மூட மாட்டோம், காதை மூட மாட்டோம் என்பீர்கள். ஆதலால், அதைப்பற்றி கூற விரும்பவில்லை.

கோவில் பிரவேசம் செய்து மக்கள் செல்கின்றனர். போராட்டத்தில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், உள்ளே சென்று, சாமியை இருகை கூப்பி பக்தி பரவசத்துடன் கும்பிட வேண்டிய அவசியமில்லையே? பிரசாதத்தை வாங்க வேண்டிய அவசியமில்லை? அடுத்த நாள் முதல் அங்கு செல்லவேண்டிய அவசியமுமில்லையே? ஆனால், இவை அனைத்தும் நடக்கிறதே. மக்கள் நடத்துவது உரிமை போராட்டம் தான். அது ஆன்மீக உரிமை போராட்டம் தான். RSS என்றீர்கள். கோட்சே விஷ்யத்தில் RSSயை முன்நிறுத்துவது தவறான வாதம். காந்தி கொலை செய்யப்பட்டதும், சில தொண்டர்கள் இனிப்பு வழங்கி சில இடங்களில் கொண்டாடினார்கள். ஆனால், கொலைக்கு பொறுப்பு RSS என்பது தவறான வாதம். அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்ற கோசத்தை தத்துவ ரீதியாக நான் முன் வைக்கவில்லை. 

முழுமையான நாத்தீக கொள்கையால் யாராலும் இங்கு அரசியலும் செய்ய முடியாது, ஆட்சியும் நடத்திவிட முடியாது என்பதை குறிக்கத்தான் அதை நான் கூறினேன். மார்கசிஸ்ட் கட்சி கூட தன் நாத்தீக கொள்கை மாற்றலாமா என்று கட்சி தலைமை விவாதிப்பதாக செய்திகள் வெளியாவதையும் இங்கு குறிப்பிடுகிறேன். அம்பேத்கர் விஷ்யத்தில் நான் கூறியது நகைச்சுவையல்ல, உண்மை. அம்பேத்கர் மட்டுமல்ல காமராஜர், கக்கன், VOC போன்ற பலரும் இன்று சாதிக்குள் தான் அடைக்கப்பட்டுள்ளனர்.

மறுமுறையும் இங்கு நான் ஒன்றை கூறுகிறன், ஆன்மீகம் என்பது பாரதத்தில் வேரூன்றி இருக்கிறது. அதை யாராலும் அசைக்கவும் முடியாது, அறுக்கவும் முடியாது. Non muslim tax அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த சட்டம் பல முறை அமலில் இருந்த சமயத்திலும் கூட எங்கள் மதத்தை யாராலும் அழித்துவிட முடியவில்லை. இனியம் அதை யாராலும் அழிக்க முடியாது.

@Osai
வன வாசி கல்யாண் பற்றி தெரியும் என்றீர்கள். அப்படி என்றால், இந்த கேள்வியை நீங்கள் மறுபடியும் கேட்டிருக்க மாட்டீர்களே. சரி. தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்து தர்ம வித்யா பீடம் கூட சாதி ஏற்ற தாழ்வை நீக்கவும், இந்து ஒற்றுமையை நிலை நாட்டவும் தான் செயல்படுகிறது.
  _______

ஆம் நண்பரே உங்கள் வாதத்தின் படி கக்கனும் அம்பேத்கரும் காமராஜரும் சாதியத் தலைவர்களாகவே பார்ப்பதாக இருக்கட்டும். இன்னும் மக்கள் அவர்களை கொண்டாடுகிறார்கள் என்றால் அவர்கள் அம்மக்களுக்கு நலன்கள் புரிந்துள்ளனர் என்றே அர்த்தப்படுகிறது. ஆனால் பெரியவாளும் சின்னவாளும் சோவும் இன்னபிற அவாக்களும் தங்களின் அவாவாக எதைக் கூறுகிறார்கள். பெண்களை வேசி என்பது முதல் கொலை செய்வது வரை அல்லவா போகிறார்கள். இதுதான் இந்து மதத்திற்கு அவர்கள் செய்யும் நலன்களா. வேலைக்குச் செல்லும் பெண்கள் வேசி என்பது ஆனால் சுற்றி வளைத்துப் பார்த்தால் முதலில் வேலைக்கோ கல்விக்கூடத்திற்கோ சென்றது பார்ப்பனப் பெண்களாகத்தான் இருக்கும். அதோடு இந்துமதம் ஏன் சங்கரமடத்துக்குள்ளேயும் பார்ப்பன வீட்டுத் திண்ணையிலேயேயும் குடியிருக்கவேண்டும். மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு என்று மார்க்ஸ் சொன்னதை சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இன்று கோவிலுக்குச் செல்வது ஒரு நாகரீக நடவடிக்கை. ஆனால் காதலர் தினத்தன்று கோவில் கதவுகளை இழுத்து மூடச் சொல்வது எந்த இயக்கம். கலாச்சாரம் நாகரீகம் என்று பேசும் இந்துக்கள் இவர்களை இந்துக்கள் என்று ஒட்டுமொத்தமகாக குறிப்பிடுவதையும் நான் எதிர்க்கிறேன். வைணவம் சைவம் பார்ப்பனியம் என்று பிரித்துக்கொள்ளலாம். 


கோவிலுக்கு இந்துக்கள் செல்வது அதிகரித்து வருகிறது என்பது எப்படியோ அதே போல் திரையரங்குகளுக்கும் கூடத்தான் செல்கிறார்கள்...பேசாமல் கோவில்களை திரையரங்கிற்கு மாற்றிவிடலாமா. அதோடு சாதரணமாக தன்னை இந்து என்று நம்பும் ஒரு மனிதன் கோவிலுக்குள் செல்லும் போது காலில் கிடக்கும் செறுப்பைக் கழட்டி விட்டுச் செல்கிறான். இன்னும் அழுத்திச் சொன்னால் தெய்வ பாஷையான சம்ஸ்கிருதத்தில் ஒரு வார்த்தைக்குக் கூட அவனுக்கு பொருளோ விளக்கமோ தெரியாது.( தெரிந்தால் அவன் கோவிலுக்குச் செல்லமாட்டான் என்பத் வேறு விசயம. ) மாறாக ஒட்டு மொத்தமாக இந்து தர்மத்துக்கு உதவியாய் இருக்கும் குருக்கள் கோவிலுக்குள் செய்யும் அட்டகாசங்களை என்ன சொல்வது உதாரணம் தேவ நாத குருக்கள். சடங்கு சம்பிரதாயம் அனைத்தும் கற்ற அவர் கருவறைக்குள்ளேயே காமக் களியாட்டத்தை நிறைவேற்றியது எப்படி. இங்கு நாம் தனி மனித உளவியலைப் பார்க்க வேணெடும் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் சுட்டிய கக்கனும் அம்பேத்கரும் காமராஜரும் அனைத்து மக்களின் நலன்களுக்கல்லவா போராடினார்கள். கோட்சேவும் இந்து மதக்கும்பலும் யாருக்காப் போராடுகிறார்கள். உண்மையில் அவர்கள் ஒடுக்கப்பட்டவனை அல்லவா அழைத்துச் சென்றிருக்க வேண்டும் . அப்படி அழைத்துச் சென்றிருந்தால் விளக்குங்கள்.

எனக்கு உங்கள் கூற்றுகளில் சந்தேகம் அதிகமாக தோன்றும் ஒன்று நீங்கள் யாரை இந்து என்று சொல்கிறீர்கள். எனக்குத் தெரிந்து வேதத்திலோ வேறு ஆதி இதிகாசங்களிலோ இந்து என்ற பதம் இல்லை. இந்திய அரசியலைமைப்போ எவன் பார்சி இல்லையோ எவன் சீக்கியன் இல்லையோ எவன் முஸ்லீம் இல்லையோ எவன் கிறித்தவன் இல்லையோ அவனை இந்து என்கிறது. அந்த இந்துக்கள் நாங்கள்தான் என பார்ப்பனியம் கொண்டாடுகிறது. மற்றபடி எனக்குத் தெரிந்து கருப்பசாமி, முனியன் என கொண்டாடும் மக்களை அது இந்து எனச் சொல்வதில்லை. நீங்கள் குறிப்பிட்ட மாவோ தனது மக்களுக்காக உழைத்தார் சண்டையிட்டார் அதே போல்தான் இதுவும் என்று நீங்கள் ஒப்பிட்ட காரனங்கள் எனக்கு அபத்தமானதாகத்தான் தோன்றுகிறது. அவர்கள் தங்கள் மக்களிடையே தீண்டாமை, தொட்டால் தீட்டு, சூத்திரனே சண்டாளனே என தன் மக்களை அழைக்கவில்லை ஆனால் பார்ப்பனர்கள் அப்படியா....காந்தியை கொன்றதற்கு rss இல்லையென்றால் கொன்றது யார் எனக்குத் தெரிந்து சுதந்திரப்போராட்டத்தில் ஆயுதம் தாங்கிப் போராடியது இரண்டே  இரண்டு பார்ப்பனர்கள்தான் ஒன்று வாஞ்சிநாதன். இன்னொன்று கோட்சே இவர்கள் கொன்றதற்கான காரணம் இந்து சனாதான தர்மத்தை காப்பாற்றுவதற்கே.

 ‘ ஒரு பிராமண கட்சியாக நமக்கு ஒரு முகம் ஏற்பட்டுவிட்டது. நம்முடைய கட்சியில், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் இயக்கத்தின் அடிமட்ட அளவிலேயே அகற்றப்படுகின்றார் என்பது அடிப்படையான உண்மையாகும்’  பி.ஜே.பி நாடாளூமன்ற உறுப்பினர். உமாபாரதி. Communalism combat ஜன 94  பக்கம் 10.


இவர்களும் மாவோவும் ஒன்றா...அவனும் கொலை செய்கிறான் நானும் கொலைசெய்கிறேன் என்பது சமத்காரமான வாதம்தான். (நாங்களும் கடவுள் மறுப்பு, இந்துத்துவ எதிர்ப்பு பேசுவதுபோல் நீங்களும் எங்களோடு இணையலாமே) மரணத்தைப் பற்றி நாம் விரிவாக பேசலாம். ஆனால் எந்தக் காரணம் என்பதில் அடிப்படையை முதலில் பேசுவோம். ராணுவத்தில் சாவதற்கும் ஒரு பெண்ணை நடுரோட்டில் கையைப் பிடித்து இழுப்பதற்கும் உள்ள மனவலிமை ஒன்றுதான். ஆனால் அவர்களின் உளப்போராட்டங்கள் குறித்து நான் விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்றே நம்புகிறேன். இந்து மதத்தை அழிக்க முடியாதுதான் ஏனெனில் சாதி இருக்கிறதே. ஆனால் பெரியார் அந்த பார்ப்பனியத்தில்  அடித்த சாவு மணிதானே இன்று பலருக்கு நல் வாழ்க்கையைப் பெற்றுத் தந்திருக்கிறது. அம்பேத்கர் ஒழியவேண்டும் என விரும்பிய பார்ப்பனர்களின் வீட்டுப் பெண்களுக்கும் சேர்த்துத்தான் அம்பேத்கர் பெண் சொத்துரிமையை சட்டமாக மாற்றினார். அதற்கு பிராமணர்களே தன் வீட்டுப் பெண்களை  அனுப்பி அது கூடாது என போராடச் சொன்னது இன்னும் முரண். பெரியார் சாக வேண்டும் என யாகம் நடத்திய பார்ப்பனர் வீட்டு பெண்களுக்கும் சேர்த்துத்தான் பெரியார் தமிழகத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை பேசினார். தீர்மானத்தையும் கொண்டுவந்தார்.

இதோடு  போகட்டும் எனக்குத் தெரிந்து உங்கள் உரையாடல்களில் நான் வைக்கும் எளிய கேள்விகள் இவை.


1.  r s s.... இந்து என்று குறிப்பிடுவது யாரைஎந்த சாதியை. ( தெய்வத்தின் குரலில் பெரியவா சொன்னது போல் நல்லவேளை பிரிட்டிஷ்காரன் நமக்கு இந்து என்று பெயர் வைத்தானே...நாம் பிழைத்தோம்...இதில் வரும் நமக்கு என்ற பதம் ஒடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறதா இல்லை பார்ப்பனர்களைச் சுட்டுகிறதா)


2.  r s s ன் மாநிலக் கொள்கைகள் மற்றும் தேசியக் கொள்கைகள் என்ன.

3.  r s s இந்துக்களுக்காக அல்லது மக்களுக்காக செய்த நலன்கள் எவை.

4.  r.s.s. எவரின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்டது.


விளக்கினால் இன்னும் விரிவாகப் பேசலாம்.


\\ இந்து தர்ம வித்யா பீடம் கூட சாதி ஏற்ற தாழ்வை நீக்கவும், இந்து ஒற்றுமையை நிலை நாட்டவும் தான் செயல்படுகிறது.\\

இதில் உள்ள முரண்கள் எனக்கு விளங்கவில்லை. இந்து என்றால் உன்னதம். மதத்தை யாராலும் அழிக்கமுடியாது என்று கூறுகிற நீங்கள் இந்து ஒற்றுமையை நிலை நாட்ட சாதி ஒழிப்பை இந்து இயக்கமே பாடுபடுகிறது என்று கூறுவது எனக்கு விளங்கவில்லை.  இந்து என்றாலே சாதி காப்பதுதான். உண்மை இப்படியிருக்க அது எப்படி சாதியை ஒழிக்கும். எல்லோரும் இந்துக்கள் ஆன்மீகம்…. என்றால் எதற்கு என் தெருவில் நீ வராதே உன் தெருவில் நான் வரமாட்டேன் கோவிலுக்குள், கருவறையில் நுழையக் கூடாது என்ற போராட்டமெல்லாம் ஏன். சாதி இந்துக்கள் அதாவது பிராமண பாஷையில் சொல்லப் போனால் சூத்திரர்கள் தட்டில் இடும் காசு வேண்டும். உள்ளே நுழையமட்டும் கூடாது.

எல்லாவற்றிற்கும் மேலாக சாதி  ஒழிப்பை, இன ஒழிப்பை, வர்ணாஸ்ரமத்தை, தீண்டாமையைப், போக்க சாதுக்களும் மதவாதிகளும் போராடுவது உண்மையென்றால்  அது பார்ப்பனர்களிடத்தில், அவர்களின் வீடுகளிலிருந்து, அவரகளின் திண்ணைகளில், அவர்கள் காலங்காலமாய் தொழுதுவரும் கடவுள்களிலிருந்து... கருவரையிலிருந்து.... தொடங்கவேண்டும். அதனால் மட்டுமே அது சாதி ஒழிப்பு மத ஒழிப்பு முழுவளர்ச்சியைக் கண்டடையமுடியும்.

வனவாசி கல்யாணுக்கு முன் அய்யா பெரியார் தமிழகத்தை முடிந்த மட்டுக்கும் சுத்தப்படுத்தியிருக்கிறார். சுத்தப்படுத்திய தெருக்கள் போக மீதி உள்ள பார்ப்பனத் தெருக்களைச் சுத்தப்படுத்த நாம் ஒன்றிணைந்தால் அது மகிழ்ச்சி.

// கோட்சே விஷயத்தில் RSSயை முன்நிறுத்துவது தவறான வாதம். காந்தி கொலை செய்யப்பட்டதும், சில தொண்டர்கள் இனிப்பு வழங்கி சில இடங்களில் கொண்டாடினார்கள். ஆனால், கொலைக்கு பொறுப்பு RSS என்பது தவறான வாதம்.//

நண்பரே...காந்தி கொலையாளிகளில் ஒருவனும்  தூக்கிலடப்பட்ட நாதுராம் கோட்சேயின் சகோதரனுமான கோபால் கோட்சேயின் ‘ நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ என்கிற நூல் 1993ல் வெளிவந்தது. புது டெல்லியில் நடைபெற்ற வெளியீட்டு விழாவின் போது சகோதரர்கள் இருவரும் ஆர். எஸ்.எஸின் தீவிர உறுப்பினர்கள் என்கிற உண்மையைக் கோபால் வெளியிட்டான்( ஸ்டேஸ்மேன், டிசம்பர் 24, 93) ஒரு மாதத்திற்குப் பிறகு ப்ரண்ட்லைன் ( ஜனவரி 28, 94) பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்,

 நாங்கள் நான்கு சகோதரர்களும் ஆர் எஸ் எஸ்ஸில் இருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்ததைக் காட்டிலும் ஆர்.எஸ்.எஸ்ஸில் வளர்ந்ததே அதிகம். அதுவே எங்களின் குடும்பமாக இருந்தது. ஆர் எஸ் எஸ்ஸின் அறிவுத்துறை ஊழியனாக ( பாவ்திக் காரியவா) நாதுராம் செயல்பட்டான். ஆர்.எஸ்ஸிலிருந்து வெளியேறிவிட்டதாக அவன் வாக்குமூலம் அளித்தது உண்மைதான். காந்தி கொலைக்குப் பிறகு கோல்வால்கரும் ஆர் எஸ் எஸ்ஸும்  பெரும் தொல்லைக்கு ஆளாகியிருந்த சூழலில் அப்படிச் சொல்ல வேண்டியதாயிற்று. உண்மையில் நாதுராம் ஆர்.எஸ் எஸ்சை விட்டு வெளியேறவில்லை”.

என்று அவன் வெளிப்படையாகச் சொன்னான்.


நாதுராமுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அத்வானி சொல்கிறாரே எனக் கேட்டபோது.

 “ நான் அத்வானியை மறுத்துள்ளேன். அப்படிச் சொல்வது கோழைத்தனம் என்றுக் கூறியுள்ளேன்.  ‘ போய்க் காந்தியைக் கொல்லுங்கள்’  என்று ஆர் எஸ் எஸ் தீர்மானம் இயற்றவில்லை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் இப்படி அவரைக் கைவிடக்கூடாது.......

என்றுதான் வரலாறு சொல்கிறது.

உரையாடலாம் நண்பரே....

No comments:

Post a Comment