Sep 15, 2012

மரணிக்காத ஒரு சொல்லைத் தேடி….




சொல்லை விதைப்பதென்பது மரணத்தை அறியச்செய்யாமல் இருப்பதாகும்
மரணத்திடமிருந்து தப்பிக்கவே நான் எழுதுகிறேன்
மரணம் பற்றிய பயத்திலிருந்து என் கவனத்தை திசைதிருப்பவல்லது மரணிக்காத ஒரு சொல்
அச்சொல்லை என் நாவிலிருந்து நான் உச்சரிக்கும் முன்போ அல்லது நடுங்கும் என் விரல்கள் கொண்டு நான் எழுதிவிடும் முன்போ
எவரோ ஒருவர் மரணிக்கிறார்
மரணித்த அவரது உடல் நிச்சயமாக மனித உடலே.
அவரிடமும் ஒரு சொல் இருந்தது
சோற்றுப்பானை கவிழ்த்து வைக்கப்பட்ட இரவன்று அவர் அதை விழுங்கிவிட்டார்
அவர் விழுங்கிய அச்சொல்லின் ஒலி மட்டும் உள்ளது என்னிடம்
இரவு வேளைகளில் சோற்றுப் பானையை உருட்டிச் செல்கிறது அவ்வொலி
கண்விழித்து காணும் வேளையில் வீடெங்கும் பச்சை குத்தப்பட்ட உடல்கள்
இருக்கும் அவ்வொலியை ஒவ்வொரு உடலிலும் திணித்துப் பார்த்தேன் 
உயிர்பெறவில்லை எவ்வுடலும்
உயிற்பிக்கும் ஒரு சொல்லை தேடிக்கொண்டிருக்கிறேன்
சொற்கள் கொல்லும் உடல்களை
சொற்கள் மீட்டுத்தருவதில்லை
தருவதேயில்லை

(இம்மாத புதிய கோடங்கி இதழில் வெளிவந்துள்ளது)

1 comment:

  1. சொற்கள் உடல்களைக் கொல்வதை விட மனங்களைத் தான் அதிகம் கொள்கின்றன. அப்படி கொல்லப்பட்ட மனது கூட மீண்டும் பழையபடி ஆவதில்லை தோழி ! நுட்பமான, என் போன்ற மரமண்டைகளுக்கு விளங்கிக் கொள்ள சற்றே கடினமான கவிதை !

    ReplyDelete