Dec 2, 2012

பெண்களுக்கெதிரான சாதிய ஒடுக்குமுறை – கொற்றவை, மாசெஸ்


நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் தலித் கிராமங்களில் நடந்திருக்கும் ஆதிக்க வெறியாட்டத்தில் சாதிப் பிரச்சனை இருக்கிற்தா – இருக்கிறது; வர்க்கப் பிரச்சனை இருக்கிறதா – இருக்கிரது; இவைகளோடு மற்றுமொரு முக்கியப் பிரச்சனை ஒன்றிருக்கிறது – அதுதான் பெண் உரிமை பிரச்சனை. (The question of women’s rights). நிலப்பிரபுத்துவ அமைப்பானது உழைப்பைச் சுரண்ட அடிமைக் கட்டமைப்புகளை உருவாக்கியது, சத்ரிய பார்ப்பனியக் கூட்டு அதை மனுதர்மச் சட்டமாக்கியது. அந்த சட்டங்களைப் பெண்ணின் கருப்பையில் திணித்தது. சாதிய பற்றாளர்கள், சாதியக் கட்சிகள் இந்த ஆணாதிக்க பார்ப்பனிய இந்துத்துவ சாதியச் சட்டங்களை தங்கள் பொருளாதார, சமூக, அரசியல் அதிகார ஆதாயக் காரணிகளுக்காக அப்படியே பிடித்துக் கொள்கின்றனர். நடைமுறைப்படுத்துகின்றனர்.
பெரியார் இருந்திருந்தால் இந்த சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் இவ்வளவு தைரியமாக சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக பேசியிருக்க முடியுமா?
ஹிந்து கோட்பில் மூலம் அம்பேத்கர் முன் மொழிந்த உரிமைகளுல் ஓர் முக்கியமான உரிமை பெண்கள் தாங்கள் விரும்பிய துணையை தேர்ந்தெடுக்கலாம் என்பதுதான், அவ்வரைவுக்கு ஆதரவு கிடைக்காமல் பதவியையே துறந்தார் அம்பேத்கர். சாதி மறுப்பு திருமணத்தை எதிர்ப்பதென்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமைக்கெதிராகப் பேசுவதென்பதாகும்.
பண்டைய தாய்வழிச் சமூகம் சிதைந்து தந்தைவழி ஆணாதிக்க சமூகம் மோலோங்கியபோது நிலப்பிரபுத்துவ அமைப்புக்கேற்றவாறு உருவாக்கப்பட்ட சட்டங்கள் பெரும்பாலும் பெண்ணை அடக்குவதன் மூலம் ஒரு சாதியை, சமூகத்தை, இனக்குழுவை, இனத்தை அடக்கி ஆள திட்டமிட்டது. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக இன்றும் அது பல சாதிக் கட்சிகளால் பின்பற்றப்படுகிறது.
ஊழல் செய்வதில்கூட பல நவீனங்களை உள்வாங்கிக்கொண்ட ஆதிக்க சாதி அரசியல் கட்சிகள் சாதி விசயத்தில் மட்டும் இன்னும் ஆண்டானைப்போல நடந்து கொள்வது பிற்போக்குத்தனமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டிவிட்டர், முக நூல் போன்ற இணையதளங்களில் வைக்கபடும் கருத்திற்கு பாய்ந்து வந்து கைது செய்யும் வல்லமை படைத்த அரசுகள் வெளிப்படையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யத்தக்க கருத்துக்களைப் பேசிவரும் காடு வெட்டி குரு, பா.ம.க நிறுவனர் இராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பழ. கருப்பையா போன்ற சாதியக் கட்சிகள், சாதிய பற்றாளர்களை ஏன் இந்த அரசு இன்னும் கைது செய்யவில்லை.
சாதி வெறியில் வீடுகளை எரிப்பது, சூரையாடுவது போன்ற வன்கொடுமைகளை திரைப்படங்களில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சமூக உணர்வு ஏற்பட்ட பின்னர் தான் இத்தகைய கொடூரங்களுக்குப் பின் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் விளங்கியது.
மீசையை முறுக்கி, தோளை விடைத்துக் கொண்டு சாதிக் கொடுமைக்கெதிராக பொங்கு எழுந்த அந்த ‘ஆண் கதாநாயக வீரர்கள்’ எவரேனும் இந்த ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கெஹ்டிராக ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிட்டிருக்கிறார்களா? ‘தாய் குலம், தங்கைக் குலம்’ இப்படி ஒடுக்கப்படுவதை வேடிக்கப் பார்க்கும் இவர்களில் சிலர் தமிழ், தமிழ் தேசியம் என்றால் மட்டும் களத்தில் இறங்குகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழர்’ என்றால் வெறும் ஆண்கள் மட்டும்தான் போலும்.
சின்மயி விவகாரத்தில் ஒரு பேட்டியில், உரையாடலின் ஒரு தொடர்ச்சியாக அவரது தாயிடம் அப்படியே உங்கள் மகளைப் ஆபாசப் பாடல் பாடுவதையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்றேன். அதைப் பிடித்துக் கொண்டு குஷ்புவிடம் சின்மயி முறையிட, இப்படிப்பட்ட பிற்போக்குத்தனமான பெண்களும் இந்த காலத்தில் இருக்கிறார்களா? அவருக்கு ஒரு கேக்கைப் பரிசளித்து தூக்கத்திலிருந்து தட்டியெழுப்ப வேண்டும் என்றார். இந்த பெண் உரிமை பாதுகாவலர்கள் சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு என்பதில் அடிப்படையில் ஒடுக்கப்படுவது பெண்ணின் உரிமை என்பதை அறியவில்லையா? கூடுதலாக அதைக் காரணமாக வைத்து சாதிய ஆதிக்கப் போக்கில் தலித் கிராமங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதி வெறியாட்டம் குறித்து இவர்கள் ஏதாவது கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்களா?
இந்த சினிமாக்காரர்கள் சிலரின் கபட நாடகங்களையும், ஆணாதிக்க மனப்பான்மையும் தெரியாமல் உழைக்கும் வர்க்கமானது மீண்டும் மீண்டும் இவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் பெண் விடுதலை பற்றியும் கவலைப்படுவதில்லை, சமூக விடுதலைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.
ஆக தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் இந்த ஆதிக்க சாதி, இடைநிலை சாதிக் கட்சிகளில் பெண் உரிமை, பெண் விடுதலைச் சிந்தனை இவைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட தலைமைகள் இருக்கின்றனவா என்பதே இப்போது இந்த நிகழ்வு நம் முன் வைக்கும் மிகப் பெரிய கேள்வி.
பொதுவாக அரசியல், சாதி, இன உணர்வு, மொழி உணர்வு என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தம் நலன் ஆண் நலனே. இங்கு கூடியிருக்கும் தோழர்கள், தலித் அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் இந்த ஆணாதிக்க அரசியலை விடுத்து பெண் உரிமையை நிலைநாட்டுவதின் மூலம் சாதி ஒழிப்பை மேற்கொள்வதின் அவசியத்தை உணர்ந்தவர்கள் என்று நம்புகிறேன்.
பெண் விடுதலையும், சாதி ஒழிப்பும் பின்னிப் பிணைந்தவை – உழைக்கும் மக்களை ஒன்றிணைப்போம், பெண் உரிமைகளைக் காக்கும் அறிவூட்டுவோம்..
சாதி-வர்க்க-பாலின வேறுபாடுகளைக் களைய ஒன்றுபட்டு போராடுவோம்.
30.11.2012 அன்று சென்னை மெரியல் ஹால் அருகில் தர்மபுரி தலித் கிராமங்கள் மீதான திட்டமிட்ட காட்டு மிராண்டித் தாக்குதலுக்கு எதிராக சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஆற்றிய உரை (சறிய திருத்தங்களுடன்).
http://saektamilnadu.wordpress.com/

No comments:

Post a Comment