Feb 2, 2015

கவிதைகள்

1.  மற்றொரு அறை

விழித்திருக்கும் அறையின்
இமைகள் ஒன்றுக்கொன்று
முத்தங்களைச் சொறிந்தது

பச்சை மச்சம் படர்ந்திருந்த பின்புறம்
அடர்பச்சையாக்கும்
மெல்லிய முடிகள்
வானை நோக்கி உயர்த்தியபடி
மிதிவண்டி ஓட்டும் தோரணையில்
முன்னும் பின்னும் ஆட்டி
கட்டளை இடும் கால்கள்
கால்களின் தாளத்திற்கிசைந்த
அழுகையொலி

வாரியெடுத்து
நெஞ்சுக்குழியில்
படுக்க வைத்து
நிறுத்தம் வந்தவுடன்
வேகத்தை குறைத்து ஓடும்
ரெயில் வண்டியின் அசைவையொத்த
ஆட்டம் கொடுத்து
காதை வருடி
நெற்கதிரென வளர்ந்திருக்கும் முடிகளின்
நடுவே விரல்களால் வருடிக் கொடுத்து
கருவறையை மெத்தையாக்கி
உறங்க வைத்திருந்தாள் அவள்

மற்றொரு
தனிமைத் துயர்கூடிய
அறை
இமைகள்
முத்தம் கொடுத்துக் கொள்வதே இல்லை

இப்போது

வயிற்றில்
எரியூட்டிய கடலொன்று
அனுமதியின்றி உட்புகுந்ததை
உணர்ந்தாள்

இரைச்சலற்ற பேரலை
பனிக்குடத்தை
பிடுங்கிச் சென்றது

நெஞ்சுக்குழியிலிருந்து நீண்டு விரியும்
விரல்கள்
அருகில் இருந்த அவளைத் தேடி
கரைகிறது செங்காகமென


2. எழுதுகிறாள் அவள்

பூமத்திய ரேகைகள்
அழிக்கப்படாமல் இருக்க
தன்
வெளியை
எழுதுகிறாள் பெண்

உறங்கவைத்து
தசைக்குள் நுழைந்த
லிங்க எழுதுகோல்கள்
இறுக இட்டுவைத்திருக்கும்
முடிச்சுகளை
கட்டவிழ்க்க

அவிழ்க்கப்பட்ட லிபிகள் வழி
ஓடித் திரியும் நாணமற்ற
பெண் நதிகளை
சிவப்பு கம்பளம்
பரவியணைக்கிறது
நாற்காலிகளற்ற வெளி

உன்மத்தம்  தீண்டாதிருக்க
பெயரற்ற சமாதியில்
தானற்ற உடலாய்
சேர்க்கப்படாமலிருக்க

கடவுளின் மொழிகளில்
அரித்த உப்பில்
ஊறித் துளைக்கும் இந்திரிய சொற்களின்
கூர்மையை மழுங்கடிக்க
புறப்பட்டிருக்கும்
செம்பறவை
எழுதுகிறாள்

 நன்றி: கொம்பு இதழ்

No comments:

Post a Comment