Mar 7, 2017

உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

நான் ஒரு பெண். ஆமாம் பெண்! பெண்மையற்றவள்! தாயாகி தாய்மையிலிருந்து வெளியேறியவள்!
இது எப்படி சாத்தியமாயிற்று? நான் பெண்ணாய் இருப்பதால் மட்டுமே சாத்தியமாயிற்று. நான் இயல்பாக இருக்க முடியவில்லை என்னும் உணர்தலே விடைகள் தேடி என்னை நகர்த்தியது. 35 வயதில் தான் இந்த உணர்தல் எனக்கு ஏற்பட்டது. இழந்த காலத்தை ஈடு செய்ய முடியாதெனினும் என்னைப் போன்ற பெண்களின் காலங்களையாவது காக்க உதவ வேண்டும் என்ற எண்ணமே நான் எழுத காரணமாய் அமைந்தது. பெண்ணை விடுவிக்க தொடங்கிய அந்தக் ‘கோபம்’ மார்க்சியத்தின் வழிகாட்டுட்தலால் சமூக விடுதலையை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்னும் ‘அறிவாக’ மாறியது.
மானுட விடுதலை என்பது சமூக விடுதலையோடு தொடர்புடையது. அதற்கு சரியான வழிகாட்டியாக மார்க்சியம் இருப்பதை கற்றும், விவாதித்தும், முடிந்த வரை சமூக நிலைமைகளோடு பொருத்திப் பார்த்தும் நான் உணர்ந்தபோது எனக்குள் நான் அடைந்த விடுதலை உணர்வை சொற்களால் விளக்கிட இயலாது. ஒடுக்கப்படுபவர்களை மீட்டு சமத்துவத்தை உண்மையிலேயே நடைமுறைபடுத்த வழிகாட்டும் மார்க்சியத்தை பிரச்சாரம் செய்வதே என் ‘பெண்ணிய’ பாதை.
இந்த பாதையில் நான் பயணிக்கத் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகின்றன. நான் நினைத்த வேகத்தில் ஓட முடியவில்லை என்னும் குறை எனக்குள் இருந்தாலும், இயங்கியல் அறிவோடு சூழ்நிலையை ஆய்ந்தறிய மீண்டும் எனக்கு அந்தக் கோட்பாடுதான் துணையாக இருக்கிறது. வழக்கமாக முதலாளித்துவ SELF-HELP கையேடுகள் Emotional Intelligence என்று மனோ நிலை நிர்வாகத்தைப் பற்றி பேசும். அதைப் படிக்கும் போதெல்லாம் நம்மை சிறந்த அடிமைகளாக மாற்ற எப்படியெல்லாம் கதை விடுகிறார்கள் என்று தோன்றும்! (மிகை தான்). ஆனால், என்னைப் பொறுத்தவரை மார்க்சிய நூல்கள் அந்த இமோஷனல் இண்டலிஜென்சை நமக்கு தரக்கூடியவை. பொருள்முதல்வாதப் பார்வையுடன் உலகை அணுகும்போது கிடைக்கும் அறிவும், தெளிவும், நிதானமும், ஊற்றெடுக்கும் அன்பும் இயற்கைக்கும், இயல்புக்கும் நெருக்கமாய் இருப்பதாக நான் உணர்கிறேன்.
ஆகவே, தோழர்களே, பெண் என்னும் அடையாளத்துடன் பிறந்திருப்பதாலேயே உங்களுக்கென விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் எனதருமை தோழிகளே பெண் என்பவள் இந்த சமூகத்தின் வரையறைப்படி யார் என்னும் கேள்வியை எழுப்புங்கள். உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவருக்கும் விதிக்கப்பட்டிருப்பது என்ன? அதை விதித்தது யார்? அது இயல்பானதா? அறிவியல் பூர்வமானதா என்னும் கேள்விகளை எழுப்ப முயற்சி செய்யுங்கள்..
இந்த சமூகத்தில் நடப்பவை குறித்தும், நம்மோடு சக பயணியாய் வரும் ஆண்கள் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்தும் அறிய முயலுங்கள். ஆண்களுக்கும் அதை புரிய வைக்க முயற்சிப்போம்.
ஒவ்வொன்றையும் கேள்வி கேளுங்கள். அறிவியல்பூர்வ கோட்பாடுகள் கொண்டு அதற்கான விடை தேடுங்கள். நீங்கள் கண்டறியும் விடைகள் சமூகத்தை விடுவிக்கக் கூடியதாய் இருப்பின் அறிவைப் பரப்புங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக மனிதர்களிடையே பல்வேறு வகையான பாகுபாட்டினை ஏற்படுத்தி அன்பையும், சமத்துவத்தையும் குலைத்து இயற்கைக்கும், இயல்புக்கும் மாறாக வாழ காரணமாக இருக்கும் பொருளாயத அடிப்படைகளை – அதாவது பொருளாதார அமைப்பை கற்றரிய முயற்சி செய்வோம்.
இன்று உழைக்கும் மகளிர் தினம். மனிதனை மனிதனே ஒடுக்கவும், சுரண்டவும் காரணமாக இருக்கும் நிலவும் தனியுடைமை பொருளாதார அமைப்பின் பல்வேறு அரசியல்-சமூக நிலைமைகளை மற்றியமைக்க வேண்டும் என்பதை நினைவூட்டி, அதற்காக உழைத்து, போராடி, தியாயகங்கள் செய்து நமக்கான உரிமைகளை பெற்றுக் கொடுத்த பெண்களை நினைவு கூறும் தினம்.
சமூக பாகுபாட்டின் அடிப்படையாக இருக்கும் உடைமை வடிவத்தை, சுரண்டல்வாத உழைப்புப் பிரிவினையை ஒழித்து சமத்துவமான பொருளாதார-சமூக அமைப்பினை நிலைநாட்ட இந்த உழைக்க்கும் மகளிர் தினத்தன்று சூளுரைப்போம்.
தோழர்கள் அனைவருக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
- கொற்றவை

No comments:

Post a Comment