Apr 19, 2017

அம்பேத்கரை விமர்சிப்பது அவசியமா?

அம்பேத்கர் மட்டுமின்றி கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட எவரையும் விமர்சனபூர்வமாக அனுகுவதே அறிவுச் செயல்பாடு.
நாங்கள் ஏன் அம்பேத்கரை தொடர்ந்து விமர்சித்து வருகிறோம்?
சாதிய ஒடுக்குமுறை என்பது இந்தியாவின் மிகக் கொடூரமான சமூக அமைப்பு.
உழைக்கும் வர்க்க மக்கள் சாதிய வன்கொடுமையால் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகிறார்கள்.
தனியுடைமையின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு மிக்க உழைப்பு பிரிவினைக்கு சாதியமைப்பு பெரும் துணையக இருக்கிறது.
சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான போராட்டப் பாதையில் சாதி ஒழிப்புக்கான வேலை திட்டம் என்பது மிக முக்கிய தேவையாக இருக்கிறது.
இந்தியாவில் உழைக்கும் வர்க்க அணி திரட்டலுக்கும், புரட்சிகர பாதையில் ஒருங்கிணைப்பதற்கும் சாதி ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
சாதி ஒழிப்பு என்று பேசும்போது கோட்பாட்டு பூர்வமாக, இரண்டு கோட்பாடுகளுக்கிடையில் ஏறத்தாழ 50 ஆண்டுகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. (குறிப்பாக அம்பேத்கருக்குப் பிந்தைய சிலக் குழுக்களின் பிழைப்புவாத தலித் அரசியல்...... (அவரை முன் வைத்து)....)
இந்தப் பின்னணியில் அனைத்துவிதமான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை அடைய வழிகாட்டக்கூடிய கோட்பாடான மார்க்சியத்திற்கும், சாதிய ஒடுக்குமுறையை (சாதியை) ஒழிப்பதற்கான ‘கோட்பாடாக’ சொல்லப்படும் ‘அம்பேத்கரியம்’ என்னும் அடையாள அரசியலும் மோதுகின்றன.
சாதியமைப்பு பற்றி முழுமையாக தான் கண்டுபிடித்து விட்டதாகவும், சாதி ஒழிப்பிற்கு தீர்வை கண்டுபிடிதுவிட்டதாகவும் அம்பேத்கர் முன் வைக்கிறார். ஆகவே சாதியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் அவற்றை ஆய்வு செய்வது அவசியமானதே. (இன்னும் ஒரு படி மேலே சென்று அம்பேத்கர் சாதியை ஒழித்து விட்டார் என்று சொல்லும் தலித் முரசு போன்ற ‘தலித்திய’ கண்டுபிடிப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்).
ஆர். எஸ்.எஸ்., சாவர்கர், பா.ஜ.க கும்பலின் இந்துத்துவ பாசிச முகம் அனைவரும் அறிந்ததே! மேலும், இவர்கள் யாரும் சாதி ஒழிப்பிற்கான கோட்பாட்டை நாங்கள் வைத்திருக்கிறோம் என்று ஆய்வுகளை எழுதவில்லை! அவர்கள் நம் எதிரிகள், வலதுசாரிகள், மதவாதிகள் என்பது வெளிப்படையானது.
ஆகவே, உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலைக்காக (தலித் மக்கள் உள்ளிட்ட) அரசியல் களமாடும் சக்திகளுக்குள் இருக்கும் முரண்பாடு, அவர்கள் முன் வைக்கும் ‘இயம்’, கோட்பாடு ஆகியவை பற்றிய ஆய்வும் விவாதமும் தவிர்க்கவியலாதது. (ஏன் இதை செய்கிறீர்கள் என்று கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பது வேறு விசயம்!)
உழைக்கும் வர்க்கம் பிளவு பட்டு நிற்கிறது. தலித்தியம் போன்ற அடையாள அரசியல் மீண்டும் மீண்டும் சாதியை வலுப்படுத்தவே உதவுகிறது! மேலும், உழைக்கும் மக்களை சுரண்டவும், சாதியை அதற்கான ஓர் ஆயுதமாய் பயன்படுத்தும் முதலாளித்துவ ஒழிப்பு குறித்து தலித்தியம் மாற்றுக் கருத்துகளை முன் வைக்கிறது. பகுதியளவில் முதலாளித்துவ ஆதரவு பேசும் பிரிவுகளும் உள்ளன.
தலித்தியம், பின்நவீனத்துவம் உள்ளிட்ட அடையாள அரசியல் பிரதானமாக மார்க்சிய வெறுப்பை போதிப்பவை. இது உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் என்பதால் இவற்றை தீவிரமாக எதிர்ப்பதும், இவ்வரசியலை முன்னெடுக்கும் ‘அறிவுஜீவிகளிடமிருந்தும்’, அரசியல்வாதிகளிடமிருந்தும் உழைக்கும் வர்க்க மக்களை மீட்டெடுப்பது பொதுவுடைமையை நிலை நாட்ட விரும்பும் ஒவ்வொருவரின் கடமை என்பதும் என் வரையிலான கருத்து.

எல்லாவற்றுக்கும் மேலாக, , ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைப் போராட்டம் என்னும் அரசியலை பேசிக்கொண்டு கம்யூனிஸ்டுகளை எப்போதும் வசை பாடுவதும், மார்க்சிய வெறுப்பு பேசி உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதும் யாரோ / எந்த ‘இயமோ’ அது பற்றிய ஆய்வு மிக மிக அவசியமாகிறது!
இப்படி பல காரணங்கள் உள்ளன…. நூல்களில் அவையெல்லாம் விரிவாகவே கூறப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் சாவர்க்கரை ஏன் விமர்சிக்கவில்லை, அருண் ஷோரி நூலை ஏன் மொழிபெயர்க்கவில்லை போன்ற சிறுபிள்ளைத்தனமான நகைச்சுவையை விட்டுவிட்டு, உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலைக்கான சரியான பாதையை சார்பின்றி, அறிவியல் பூர்வமாக முன் வைக்கவும், விவாதிக்கவும் முயற்சி செய்யுங்கள்.
(பி.கு: இந்தப் பழைய ஜோக்குகளுக்கு வயிறு வலிக்க சிரித்து நான் ஓய்ந்துவிட்டேன். மேலும் polemics என்பது ஒரு நூல் வந்ததை ஒட்டி தொடரும் விவாதம்... இந்த அரிச்சுவடி பாடங்களைக் கூடவா எடுக்க வேண்டும்!)

No comments:

Post a Comment