Feb 11, 2018

சமத்துவம் நிறைந்த பொன்னுகலகு அமைய......

அருவருக்கத்தக்க முகமூடி கிழிந்துவிட்டது
மனிதன்
செங்கோல் அற்று இருக்கிறான்
சுதந்திரமாக
எவ்விதத் தடையுமின்றி இருக்கிறான்.
மனிதன்
சமத்துவமாக
வர்க்கமற்ற
குலங்கள் அற்ற
சேதமற்ற நிலையில் இருக்கிறான்.
மனிதன்
எல்லா அச்சத்திலிருந்தும்
எல்லா வழிபாட்டிலிருந்தும்
எல்லா வேறுபாட்டிலிருந்தும்
நீங்கி.
தானே தனக்கு அரசனாக இருக்கிறான்.
- ஷெல்லி

இதுவே நாம் அடைய விரும்பும் பொன்னுலகம்.... (வர்க்கமற்ற.... சாதியற்ற...)
பாட்டாளி வர்க்கம் புரட்சியை முன்னெடுத்துச் சென்று இறுதிவரை நடத்திச் செல்லும் போதும், பழமையான சமூகத்தின் அறிவு ஜீவிகள் தம்மை பெருந்திரளான மக்களுடன் இணைத்துக் கொண்டு செயல்படும் போதும், பெருந்திரளான மக்கள் பழம் சமூகத்தின் அறிவியல் வளர்ச்சி, கலை நுணுக்க வளர்ச்சி போன்ற அறிவுச் சாதனைகளைத் தமக்குள் கிரகித்து கலாசார மட்டத்தில் தம்மை உயர்த்திக் கொண்டு செயல்படும் போதும், மனித சமுதாயத்தின் வர்க்கப் பிரிவினைகள், உடல் உழைப்பு, மன உழைப்புப் பிரிவினைகள், மானிட சமூக உணர்வுகளில் ஏற்பட்ட பிரிவினைகள் (சாதி உள்ளிட்ட பிரிவினைகள் – கொற்றவை) ஆகியவற்றுக்கிடையில் ஒரு புதிய ஒற்றுமை மலரும். அது மனித சிந்தனையின் அறிவு அம்சங்களுக்கும், உணர்ச்சி அம்சங்களுக்கும் இடையிலான ஒற்றுமையாகும். அது மட்டுமல்ல, மனித சிந்தனையின் இவ்விரண்டு அம்சங்களுக்கும் நடைமுறைக்கும் இடையிலான ஒற்றுமையாகும்.

அங்கிலேயேப் புரட்சிக் கவிஞன் ஷெல்லி மேற்சொன்னவாறு பாடினான்…. (மனித சமூக சாரம்: கலை அறிவியலின் மூலாதாரங்கள், ஜார்ஜ் தாம்சன்)

வர்க்கம் என்றால் என்ன, நிலவும் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் மற்றும் உழைப்புப் பிரிவினை என்றால் என்ன அதில் சாதி எப்படி இயங்கியது, தற்போது எப்படி இயங்குகிறது, சமூக உறவுகள் என்றால் என்ன, சமூகக் கட்டுமானம் என்றால் என்ன என்பதை எல்லாம் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் (மார்க்சியம்) கொண்டு கற்றரியாமல் ஒருவர் எவ்வளவு நல்லெண்ணெத்துடனும், அர்ப்பணிப்புடனும் போராடினாலும், அல்லது அத்தகைய தலைவர் எவரை முன்வைத்தும், மாற்று மதம் என்று எதனை முன் வைத்து ஜனநாயக சக்திகள் (மார்க்சியத்தைப் புறம் தள்ளிவிட்டு) சாதி ஒழிப்புப் போராட்டங்களை முன்னெடுத்தாலும், சாதி ஒழிப்பு பேசினாலும் அது போதாமை நிறைந்ததாகவே இருக்கும்.

பிரச்சினைக்குரிய அடித்தளத்தைத் தகர்க்காமல் மேல் மட்டத்தை தகர்க்க முனைவது அறிவியலாகுமா? அந்த அடித்தளத்தின் மேல் புதியதொரு கட்டிடத்தை எழுப்பினாலும், அடித்தளத்தில் உள்ள பிளவுகள் காலப்போக்கில் மேலே பரவத்தானே செய்யும்.

நாங்கள் மார்க்சிய வெறுப்பாளர்கள் இல்லை, ஆனால் கம்யூனிஸ்டுகள் தான் அம்பேத்கரை ஒதுக்குறீர்கள், சாதி ஒழிப்பை சரியாக முன்னெடுக்கவில்லை என்பவர்கள் அம்பேத்கரை யார் தலித் தலைவராக மட்டும் முன்வைத்து அரசியல் செய்கிறார்கள், மார்க்சியத்தை புறக்கணித்தோ அல்லது மார்க்சியத்தை வெறுத்தோ இயங்கும் தலித் அமைப்புகள் யாவை என்பதை எல்லாம் கவனித்து, அத்தகைய தலைவர்களால் சாதி ஒழிப்பில் அடைந்த முன்னேற்றம் என்ன என்பதை விரிவாக எழுதலாம்.

தலித்தியத்தின் பெயரால் முன்வைக்கப்படும் சாதி ஒழிப்பு வேலைத்திட்டம் என்ன?

மார்க்சியத்தை எதிர்க்கவில்லை என்றால் ராஜா காலேவின் தலித்தியவாதம் குறித்தும் அவர் வழி வந்தவர்களின் தலித்திய அரசியல் (கம்யூனிச எதிர்ப்பரசியல்) பற்றியும், அதில் என்.ஜி.ஓ அரசியல் மற்றும் மத மாற்ற அரசியல் குறித்தெல்லாம் கற்றரியலாம்.

எப்படி இங்கே கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தோல்வி பற்றிய சுய விமர்சனத்தை கம்யூனிஸ்டுகள் முன்வைத்துப் பேசியுள்ளார்களோ அதேபோல் தலித்திய அரசியல் (மற்றும் இயக்கங்களின்) தோல்வி குறித்தும் திறந்த மனதுடன் ‘தலித்தியவாதிகள்’ பேசவும் செய்வதே உண்மையில் நாம் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்க மக்களின் விடுதலையில் அக்கறை கொண்டுள்ளோம் என்பதற்கு சான்றாக இருக்க முடியும்.

தலித்தியத்தை (மட்டும்) முன் வைத்துப் பேசும், இயங்கும் அமைப்புகள் பற்றியும், பிரிவுகள் பற்றியும் ஆய்வு செய்யுங்கள். ஒவ்வொரு தலித்திய அமைப்பின் தலைமைகள், கட்சிகள் எந்த அடிப்படையில் உருவானது, காலப் போக்கில் அவற்றின் நிலை, அது ஏன் சாதிய ரீதியில் பிரிந்துள்ளது என்பதை எல்லாம் ஆய்வு செய்யுங்கள். தலித்திய அமைப்புகள் அனைத்தும் அம்பேத்கரை தங்கள் தலைவராக ஏற்றிருப்பினும் அவர்களுக்குள் நிலவும் பிரிவினையின் அடிப்படை என்ன? உட்சாதிப் பூசல் என்பதே மழுப்பலான வாதம். தமக்கான ஒரு அரசியல் அமைப்பு வேண்டும் என்பதால் என்றால், ஏன் குறிப்பிட்ட சாதிக்கான அமைப்பாக மட்டுமே அது உள்ளது? அதிலும் கூட உள்ள முரண்பாடுகளுக்கு என்ன காரணம்?

அதேவேளை ஆம் இந்திய சமூகத்தில் சாதிய மனநிலை எல்லா மட்டங்களிலும் உள்ளது என்பீர்களானால், அதை வெறும் கருத்தியல் பிரச்சினையாகவோ அல்லது இந்து மதப் பிரச்சினையாகவோ மட்டும் அணுகுவது பயன் தருமா என்பதையும் இதுகாரும் நிகழ்ந்துள்ள பல்வேறு நிகழ்வுகளை, விவாதங்களை முன்வைத்து நீங்களே ஆய்வு செய்யுங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சமத்துவம் என்றால் என்ன என்பதையும், அனைத்துப் பாகுபாடுகளையும் ஒழிக்க எது அவசியமான வழி என்பதையும் நீங்களே கற்றரியுங்கள்.

எங்களைப் போன்றோரின் அரசியல் விமர்சனம் உங்களுக்கு உவப்பானதாக இல்லையெனில் அறிவுத் தளத்தில், ஆய்வுத் தளத்தில் அம்பேத்கரையும், பௌத்தத்தையும் முன்வைத்து சாதி ஒழிப்புக்கான வேலைத்திட்டத்தை முன்வைய்யுங்கள் கற்றரிந்துகொள்கிறோம்.

அதில் தீர்வு இல்லை என்று உணரும்போது நாங்கள் எங்களது கேள்விகளை விமர்சனங்களை தொடர்ந்து கொண்டே இருப்போம்….. (அவசியமான தளத்தில் மட்டுமே….)

No comments:

Post a Comment